புதன், 28 நவம்பர், 2012

கிரைம் கதை மன்னன் ராஜேஷ் குமார்!!!!



     "வயலட் நிறத்தில் சூரிய கதிர்கள் உதயமாகியிருந்தது. அடர் கருப்பான க்ராபைட் பூமி! சாலைகள் இருந்தன. கோழி முட்டை வடிவத்தில்வாகனங்கள் அல்ட்ரா சானிக் வேகத்தில் மிதந்து கொண்டிருந்தன. ஒழுங்கீனமான அகல உயரங்களில் செம்பழுப்பு நிற கட்டிடங்கள் ஆங்காங்கே தென்பட்டன. போரா என்கிற அவன் தன்னுடைய கை கால் உடம்பை தனி தனியாக கழட்டி போட்டு இளஞ்சூடான திரவத்தில் ஊற வைத்து செல்ப் மசாஜ் எடுத்துகொண்டிருந்த அந்த மைக்ரோ வினாடியில் – அவனுக்கான ஏர் பாக்கெட் தகவல் வந்தது."



அன்பின் பிளாட்டின நண்பர்களே! வணக்கமுங்கோவ்!
நல்லா இருக்கீயளா! நான் இங்கே சுகம்தாங்க! 
சித்திரங்களில் நனைந்து எழுவது என்பது நம்மை போன்ற காமிக்ஸ் ரசிகர்களுக்கு கை வந்த கலைதான். ஆனால் சில சமயங்களில் வரைய பட்டுள்ள ஓவியம் பிடிக்காமல் போக வாய்ப்பு உண்டு. ஆனால் என்றும் அள்ள அள்ளக்  குறையாத அமுத சுரபியாக நமது மனவெளி இருப்பதால் நாவல்கள் படிக்க கற்பனை வெளி நமதாக அமைந்து மிக உற்சாகத்தை தூண்டும் விதத்தில் இருப்பது என்பது  நாவல் உலகில் மட்டுமே சாத்தியம். ஒரு சில நாவல்கள் பல காலம் தாண்டியும் படிக்கும் மனதில் வெவ்வேறு வித வண்ண கலவைகளை குழைத்து வண்ணம் தீட்டுகின்றன. அதுதான் நாவல் உலகின் சிறப்பம்சம். மேலே கண்ட வரிகள் உங்கள் மனதில் தீட்டிய வண்ணத்தை என் மனதில் தீட்டும்போது அது என் மன வானில் வேறு வண்ணமாகதானே அமைந்து கலக்கும்? 


என்னடா இது இவன் ஒருவேளை எழுத்தாளர் ஆகி தொலைத்து விட்டானா என்று பார்க்க வேண்டாம். சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல் காமிக்ஸ் பற்றி பல விதமான கருத்துகள் வெளியானது. அறிவியல் சிந்தனைகள் நிறைந்த எதிர்காலம் தொக்கி நிற்கும் கதைகளின் வரவேற்பு குறித்து, மற்றும் கதைகளின் பல கோணங்கள் பற்றியும் நிறைய சிந்தனை மலிந்து கிடக்கின்றன. வெளி நாட்டவர் சிந்தனைகள் எப்போதும் எதிர்காலம் பற்றியதாகவே பெரும்பாலும் இருக்கிறது. ஆனால் பழைய காலம் குறித்தும் காமிக்ஸில் கதைகள் சொல்லியே வருகின்றனர். அதாவது இறந்த காலம், எதிர்காலம் இரண்டு கோணத்திலும் கதைகள் வெளியாகி பட்டையை கிளப்பி வருகின்றன.

                என் பையனை வழிக்கு கொண்டு வர சாம,பேத , தான, தண்டங்களை பயன்படுத்தி பார்த்து விட்டேன். ஒன்னும் முடியலை! பயல அடக்க முடியலை! வாரிசு செய்யும் சேட்டைகள் ஒரு லக்கி கதை படிக்கும் சுவாரசியம் நிறைந்த எபிசோடுகளாக உள்ளன நண்பர்களே! எப்போதும் தோற்கும் கட்சி நானாகவே இருக்கிறேன்! அவனை பிடித்து பாரதியார் வேடம் அணிவித்து "அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே " பாடலை சொல்லி கொடுப்பதற்குள் நாக்கு தள்ளி விட்டது. பள்ளியில் மாறு வேட போட்டி! பயல மேடையில் ஏத்தும் வரை தெளிவாத்தான் இருந்தான். ஆனா ஏத்தி விட்டதும் நான் கடவுள் ரேஞ்சுக்கு அமைதியா இருந்தா என்ன பண்றது? 
 
     அப்புறம் இந்த வார பதிவுக்கு உங்களை வருக வருக வருகவென வரவேற்பதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன்!

மேலே கண்ட வைர வரிகள் கிரைம் நாவல் இதழில் 182 வது வெளியீடாக கடந்த 10/2002 அன்று வெளியிட பட்ட அன்பு அண்ணன் திரு ராஜேஷ் குமார் அவர்களது சிந்தனை சிகரத்தில் உதித்த “ஒரு கோடி ராத்திரிகள் என்கிற நாவலின் வரிகள். கதைப் படி ஒரு வேற்று கிரகத்தில் இருந்து பூமியை பிடிக்க வரும் அயல் கிரக மனிதர்கள் – அவர்களை தனது ஆறாம் அறிவினால் உணரும் ஒரு பெண் – சிலர் விசித்திரமான முறையில் பலியாகிறார்கள் – கடைசியில் அந்த கிரகம் குறித்த அனைத்தும் மனோ வசிய நிலையில் அந்த பெண்ணுக்கு ஏற்றப்பட்ட தகவல் என தெரிய குற்றவாளி சிக்குகிறார். இதை எழுதிய பிரபல நாவல் ஆசிரியர் திரு ராஜேஷ் குமார் அவர்கள் – கோவை வாசி – தனது மிக சிறந்த கற்பனை படைப்புகளால் தமிழக உலகை ஆட்டி வைத்திருப்பவர் ஆவார். கின்னஸ் சாதனை நூலில் இடம் பெற இவரது ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாவல்களின் அணிவரிசை காத்திருக்கிறது.

 ராஜேஷ் குமார் – தமிழ் பத்திரிக்கை உலகில் தனக்கென ஒரு ராஜ பாட்டையை அமைத்து கொண்டவர். ஆயிரத்து ஐநூறு நாவல்களை நோக்கி எழுதிகொண்டு இருக்கும் இவரின் இந்த நாவல் கிரைம் நாவல் இதழில் வெளிவரும் 275 வது நாவல். இவரது வெற்றியின் ரகசியம், இன்றைய விஞ்ஞான யுக மக்கள் எதை தேடுகிறார்கள் என்று அறிந்து அதை தனது நாவல்களில் எளிமையான வரிகளில் மக்கள் மனதில் நன்கு பதியும் வண்ணம் எளிய நடையில் தருவதுதான். சுமார் இருபது ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் பிரபல பத்திரிக்கை குமுதத்தின் சிறப்பு நிருபர் திரு.ரஜத் ஒரு கேள்வி கேட்டார் –வருங்கால விஞ்ஞான வளர்ச்சியில் எது மக்களிடம் வரவேற்பை பெரும் என்ற கேள்வி அது! அண்ணன் ராஜேஷ் குமார் அவர்கள் சொன்ன பதில் என்ன தெரியுமா? விடை காண கீழே போங்க!
அன்பு அண்ணன் ஆசிரியர் அசோகன் அவர்கள். மனம் நிறைந்த சிரிப்பு என்றும் மாறா முகம் கொண்டு கிரைம் நாவல் உலகை ஆண்டுவரும் அதிரடி அரசன் அவர். நிறைய ஆலோசனைகள். அறிவுரைகள், அவரது குடும்ப நாவல் பதிப்பில் இருந்து கிரைம் நாவலில் பதிப்பிப்பார். அண்ணன் ராஜேஷ்குமார் அவர்களிடம் அவ்வப்போது வாங்கி கட்டிக்கொண்டு நிறைய மாற்றங்களையும், தொடர் சாதனைகளையும் புரிந்து வருகிறார். அவருக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். நான் நேரடியாக பார்க்கவோ பேசவோ முடியா விட்டாலும் நான் ஒரு கிரைம் கதை தீவிர ரசிகன் என்பதனை இங்கே பதிவிட நினைத்து அதனால் விளைந்ததே இந்த பதிவு.
ஒரு நாவல் எழுதவே நிறைய அறிவையும் ஆழமான அனுபவத்தையும் வளர்த்து கொள்ள வேண்டும். அண்ணன் ராஜேஷ் குமார் அவர்கள் எழுதி அதுவும் கிரைம் நாவலில் மட்டுமே தொடர்ந்து எழுதி சாதனை படைத்த 275 ஆவது தங்க தாமரை நாவலே கருப்பு தாமரை மற்றும் எல்லாம் பொய் ஆகிய இரட்டை நாவல்கள்.
ராஜேஷ் குமாரிடம் கேளுங்கள் என்ற பகுதியில் ரசிகர்கள் கேள்விக்கு அண்ணன் நிறைய ருசிகரமான பதில்கள் சொல்வார்.
உதாரணத்திற்கு ஒரு கேள்வி பதில்
*லஞ்சம் குறைய என்ன செய்ய வேண்டும்?
*கொஞ்சமாய் கொடுக்க வேண்டும்!
இது போன்ற பல சுவாரசியமான பதில்களில் உங்களை கட்டி போட்டு விடுவார்.
நாவலில் சில பகுதிகள்
-எந்த ஒரு வினாடியிலும் சூரியனை பிரசவிக்க தயாராக இருந்தது கிழக்கு திசை!
-உடம்பு முழுவதும் தீ பற்றிக்கொண்ட மாதிரியான ஒரு ஆத்திரம் குபீரென்று பரவ...அவளுடைய கழுத்தை பிடித்தான்.
-மூளைக்குள் நிறைய கரப்பான் பூச்சிகள்
-இருபது அடிக்கு பார்த்தீனிய செடிகள் ஒடிந்து வழி காட்ட, ஆங்காங்கே உறைந்து போன ரத்த துளிகள்..
விலை ரூபாய் முப்பதில் வெளியாகி பட்டையை கிளப்பி வரும் இந்த நாவலை வாங்கி நாவல் உலகம் மலர நிறைய பூக்கள் வாசனை வீச செய்வீர் அன்பான உள்ளங்களே! 
ஆமாம் நண்பா! அவர் சொன்ன பதில் “செல்போன். உண்மையான அறிவு வளர்ச்சிக்கும் ஆக்க பூர்வ சிந்தனைகளுக்கும் நம்ம ராஜேஷ் குமார் அவர்கள் எப்போதுமே மிகுந்த இடம் அளித்து எழுதுவார். எனக்கு நேரடியாக எப்போதுமே பாராட்டி எழுதி பழக்கம் இல்லை. அதற்கான சூழலும் இல்லை. ஆனால் எனக்கு பிடித்த மிக மிக ஆச்சரியமடைய செய்த கதை மன்னன் திரு.ராஜேஷ் குமார் அவர்களை பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு வாய்ப்பாகவே இதனை கருதுகிறேன்.  மீண்டும் வேறு ஒரு நாளில் சிந்திப்போம். இனிய கார்த்திகை நாள் நல்வாழ்த்துக்கள் நண்பர்களே!
முக நூல் முகவரி யாரோ ஒரு விசிறி செய்துள்ளார்!

http://www.facebook.com/pages/Writer-Rajesh-Kumar/142649689159833


திங்கள், 19 நவம்பர், 2012

அதிரடியின் அடுத்த பெயர் -- வாய்னே ஷெல்டன் !!!!

                        அன்பார்ந்த வாசக பெருமக்களே! வணக்கம். அடுத்து  ஒரு பதிவோடு உங்கள் அனைவரையும் சந்திப்பதில் நான் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன். வீட்ல  எல்லோரும்  சுகமா?  அனைவரையும்  விசாரித்ததாக சொல்லுங்க!   தீபாவளி   எல்லாம் நல்லா போச்சுங்களா? வெடி எல்லாம் நல்லா வெடிச்சதா? தலைவர் டைகரின் தங்க கல்லறையுடன் மகிழ்ச்சியா, திகிலா , சோகமா , கோபமா  இருந்திருப்பீங்க((!!!!!!!!!!!!!)). நானும் அதே!! அதே!! 

             நான் வாண  வேடிக்கை எல்லாவற்றையும் நம்ம ஆசிரியரின் ப்ளாகில் ரசிக்க நேரம் இருந்த அளவிற்கு பின்னூட்டம் போட்டு கலாட்டாவில் கலந்து கலாய்க்க நேரமில்லாமல்  போய்டுச்சி ! அதேன்  என்னோட ஒரே ஒரு வருத்தம்!!!
             
              நண்பர்கள் வடை (அடச்சே!) படை வளர்ந்து கொண்டே வருவது மிக மிக நல்ல விஷயம். அன்புக்கும் அரவணைப்புக்கும் அச்சாணியாக ஆசிரியர் திரு.விஜயன் அவர்கள் இருக்கையில் எந்த குழப்பமும் வெயிலை கண்ட பனியாக, சிங்கத்தை கண்ட சிறு நரியாக மாறி ஓடிவிடும். நம்ம கருத்து கும்மாங்குத்துக்கள் நல்ல ஒரு நிலையை காமிக்ஸ் உலகில் கண்டிப்பாக உருவாக்கும். நாற்பது வயதே கடந்த குழந்தை நம்ம காமிக்ஸ். ஆகவே அது தன் சிங்க பாய்ச்சலில் இறங்க உறுதுணையாக இருப்பது, பெட்ரோலாக விளங்குவது உங்கள், என் கருத்துகளே. ஆகவே நிறைய விவாதங்களையும், வில்லங்கமில்லாமல் அனைவரையும் அனுசரித்து களமிறக்குங்கள் என்பதே எனது அன்பான வேண்டுகோள்.  
இதான் வடை. நம்ம ப்ளாக் அகில உலக அளவில பிரபலம் ஆய்ட்டதால (அடப்பாவி  7 பேர் தொடரும்போதே  இவ்வளவு குசும்பா என யோசிப்போர் கவனத்திற்கு --நாங்கல்லாம் குசும்பை குளுப்பாட்டி  குன்னூர்ல குடியேத்துனவங்க!! (என் சொந்த வசனம் நண்பர்களே! வடிவேலுக்கு வேணும்னா வந்து பார்க்க சொல்லுங்க! ) நிறைய  வெளி நாட்டவர் நம்மளை தொடர்பு கொண்டு இருக்காங்க! அவர்களுக்காக!! வடை என்பது நிலாவில் நீலான் தனது காலினை பதிக்கும்  முன்னமே நாங்க சுட்டு தேர்ல  ஏத்தி அனுப்பி வைத்த ஒன்றாகும். என்ன ஒண்ணு  அமெரிக்காகாரன் போகறதுக்குள்ள வேற்று கிரக வாசிகள் அடிச்சிக்கிட்டு போய்ட்டாங்க!    
                   இனி பதிவுக்குள்  போகலாம். அதிரடி நாயகர்கள் வரிசையில் இன்னும் ஒரு ராக்கெட்  வீரன் வாய்னே ஷெல்டன்!!. நம்ம தமிழ் காமிக்ஸ் உலகத்தில் அறிமுகம் ஆகிறார். முத்து காமிக்ஸ் நாற்பதாம் ஆண்டு கொண்டாட்ட காமிக்ஸ் வெளியீடான முத்து நெவெர் பிபோர் ஸ்பெஷல் மூலமாக நம் காமிக்ஸ் வானில் சிறகடிக்க வருகிறார். ஆதரவு நல்குவீர் நண்பர்களே!!   ஐம்பது வயது, எல்லா ஆயுதங்களையும் கையாளும் திறமை. வசீகரிக்கும் நரை முடி, பல அதிரடி பயிற்சிகள் முடித்த நாயகருக்கு ஒரு பணி ஒப்படைக்க படுகிறது. லாரி ஓட்டி போய் விபத்தை சந்தர்ப்ப வசமாக ஏற்படுத்தி விடும் நண்பரை மீட்க வேண்டிய நிலை...

நன்றிகள் tamilscannalations!!! இது சும்மா சாம்பிள் மட்டுமே!!! ஹீ! ஹீ! ஹீ !

அந்நிய மண்ணில் இருந்து அவரை மீட்க வேண்டும். தனது குழுவை தானே தேர்வு செய்கிறார். பட்டியலில் இடம் பிடிப்போரில் ஒரு வீர பெண்ணும் அடக்கம். அவர்களுடன் அந்நிய மண்ணில் அவர் நிகழ்த்தும் சாதனை  பட்டியல்களை பார்த்து ரசிக்க ஆதரியுங்கள்!!! "முத்து நெவெர் பிபோர்  ஸ்பெஷல்". விலை ருபாய் நானூறு மட்டுமே. பத்து முத்தான கதைகள் தாங்கி வெளி வருகிறது. தொடர்புக்கு சிவகாசி, பிரகாஷ் பப்ளிஷர்ஸ்.  

அப்புறம் நிறைய  தகவல்களுடன் இதே இடத்தில் சிந்திப்போம் நண்பர்களே. ஹாப்பி ரீடிங்! அடியோஸ்! அமிகோஸ்!
                                



புதன், 14 நவம்பர், 2012

தங்கமான போராட்டம்!

அருமை நண்பர்களே! ஆருயிர்த் தோழர்களே!

உங்களில் ஒருவன்! ஜான் சைமனின் இனிய வணக்கம்! தங்கள் வரவு நல்வரவாகுக! இடையே பணியில் சோதனைகளும் பின் சாதனைகளும் அனைவருக்கும் சகஜம்தானே? அடியேனுக்கும் அதே! அதே!
மனித வாழ்க்கைதான் எத்தனை இனிமையானது? அதை வாழ தெரிந்து கொள்ள எவ்வளவு காலம் பிடிக்கிறது? ஆராய புகுந்தால் வாழ்வும் அதில் சில நிகழ்வுகளும் நம் வாழ்வின் இன்பங்களையும் அதை அனுபவிக்காமல் வெறுமனே ஆராய்ந்தே வாழ்க்கையை தொலைத்து கொண்டிருப்பதையும் அறிந்து கொள்ளலாம்! 
பகவான் ஓஷோ கூறுவார்
 "ஒரு பூ பூத்திருப்பதை கண்ணால் பார்த்து ரசிக்கலாம். அதனை ஆராய்கிறேன் பேர்வழி என்று களத்தில் இறங்கினால் வெறும் இதழ்கள், இலைகள், மகரந்த தூள்கள், அல்லி வட்டம், புல்லி வட்டம், குறுக்கு வெட்டு தோற்றம், நெடுக்கு வெட்டு தோற்றம் ஆகியவையில் மூழ்கி பூவின் அழகை ரசிக்க மறந்து விடுவீர்கள்" இந்த சிந்தனைகளோடு இந்த பதிவிற்கு வருக வருக என மறு முறை வரவேற்கிறேன்!

  தரணி புகழும் "தங்க கல்லறை" என்ற இந்த நூல் 17  ஆண்டுகளுக்கு முன்னர் முத்து காமிக்ஸ் மூலமாக வெளியிடப் பட்டு விற்பனையில் சக்கை போடு போட்ட கதை. தற்போது மீண்டும் மீண்டு வந்திருப்பது முழு வண்ணத்தில். விலை வெறும் நூறு ரூபாய்களே. அந்த நூறு ரூபாய்க்குள் மிக சிறந்த கதை புத்தகமான இதனை வாங்கி வெற்றி வெளியீடான இந்த நூலை விற்பனையிலும் இந்த வருடத்தின் தலை சிறந்த வெளியீடாக மாற்ற உங்களை அன்புடன் கேட்டு கொள்கிறேன்.


    "தங்கம்" என்றாலே ஒரு கிக் வந்து விடுகிறது இல்லை? தங்கத்தில் கல்லறையா தலைப்பே திகில் ஊட்டுகிறதே என்ற எண்ணம் தோன்ற செய்கிறது இல்லையா? முன் அட்டையில் கம்பீரமாக நாயகர்கள் வலம் வரும் காலமிது. எந்த துறையிலும் தலைவர்களே முன் நிறுத்தப் படுவதை நாமெல்லாம் கண்டிருக்கிறோம். இந்த கதையில் வில்லனை அட்டை படத்தில், அதுவும் முன் அட்டையில் தீட்டி இருப்பதே இந்த கதையில் வில்லனின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும். அடர்ந்த பனி இரவில் மலைகளின் மத்தியில் மர்மமாக எரியும் நெருப்பை நோக்கி பாயும் தோரணையில் தெரியும் ஒரு மர்ம ஆசாமியே கதையின் வில்லாதி வில்லன்.
      பின் அட்டையில் தகிக்கும் பாலை வெளியில் சுட்டெரிக்கும் சூரியனின் கொதிப்பினை பின்புலமாக கொண்டு அமைந்திருக்கும் அட்டையில் கண்களில் தெறிக்கும் தன்னம்பிக்கையின் வெளிப்பாடாக பாய தயாராக நிற்கும் அழகான குதிரையின் மீது அமர்ந்திருப்பவர்தான் கதையின் ஹீரோ ப்ளூ பெர்ரி என்கிற கேப்டன் டைகர்.
            அமெரிக்க ராணுவத்தில் அரிய பல சாதனைகளை நிகழ்த்தி அதிகாரிகளிடம் கெட்ட பெயரும், வீரர்கள் மற்றும் வாசகர்கள் மத்தியில் ஹீரோவாக பதிவான நாயகன்தான் நமது அன்பான டைகர். அவரது அனைத்து கதைகளிலுமே ஒரு அப்பாவி நாயகனின் மீது பழி விழும். அதனை நியாயத்தின் துணை கொண்டும், தோழர்களின் துணை கொண்டும் எப்படி எல்லாம் களைந்து எறிகிறார் என்பதையும் தன் மீதான பழியினை எப்படி எதிர் கொண்டு வென்று நிற்கிறார் என்பதனையும் மிக ஆழமாக சித்திரங்கள் மூலமும், கதையின் அதி வேகமான போக்கின் மூலமாகவும் தெரியப்படுத்தி இருப்பார்கள்.
                        இக்கதையில் நம் நாயகன் தங்க வேட்டை வெறி பிடித்த ஒரு கயவனை துரத்திக்கொண்டு பாலை பரப்பில் நுழைகிறார். அவரது உற்ற நண்பன் அவருக்கு துரோகம் இழைத்து விட்ட நிலையில் நீதியை நிலை நாட்ட  தனது தன்னம்பிக்கையை துணையாக கொண்டு முன்னேறி செல்கிறார். பின் தொடரும் தீயவர்களின் கூட்டம் ஒரு புறம், அபாச்சே செவ்விந்தியர்களின் தொல்லை மறு புறம் என பாய்ந்து வந்தாலும் அஞ்சாமல் முன்னேறி செல்கிறார். ஒரு கட்டத்தில் தான் தேடி செல்லும் கயவன் எவ்வளவு கொடியவன் என்று அறிய நேரும் போது தனது தோழனை அவனிடம் இருந்து காக்கும் மிக முக்கியமான பணியும் சேர்ந்து கொள்கிறது.
                         தன் தங்கத்தை பூதம் போல காக்கும் மர்ம மனிதனின் தொடர் தாக்குதல்களில் இருந்து மீண்டு அவனை அவன் குகையிலேயே சந்திக்கிறான்  லக்னர் எனும் பெயரை உடைய கயவன். அவனை ஆசை காட்டி தங்க தோட்டாக்கள் செய்யும் பட்டறைக்குள் இறங்க செய்து விடுகிறது அந்த பிசாசு. அதுதான் தனக்கு விதிக்க பட்ட தங்க கல்லறையோ என்ற அச்சம் உறுத்த அந்த நேரத்திலும் தனது மன வலிமையின் காரணமாக தப்பி வருகிறான் லக்னர். அவனை பின் தொடரும் டைகர் மற்றும் தோழர் ஜிம் என்ன செய்கிறார்கள்? உண்மையில் அந்த பிசாசு யார்? ஆகிய கேள்விகளுக்கு வாங்கி படியுங்கள் "தங்க கல்லறை" இப்போது பரபரப்பான விற்பனையில்......
மீண்டும் மீண்டு வரும் வரை உங்களின் அன்பில் என்றும் திளைத்திருக்கும் உங்கள் இனிய நண்பர் ஜான் சைமன்..
நண்பர் சௌந்தர் அவர்களது ஸ்கேன் சில உங்கள் ஆதரவான பார்வைக்கு. கீழே...








அடுத்த வருட அதிரடிக்கும் கதைகளுக்கு முன் பதிவு செய்திடுங்களேன்???


தங்க கல்லறை எனது பார்வையில் 


அடியேனின் அன்பு மகன் கிறிஸ்டோபர்!
மற்ற படங்களை கண்டு களிக்க http://tamilcomics-soundarss.blogspot.in/ என்ற முகவரியில் உங்கள் நட்புக்கு நண்பர் திரு.சௌந்தர் இருக்கிறார்.
http://www.comicsda.com/2012/11/theghostwithgoldenbulletsblueberry.html என்ற முகவரியில் அன்பு நண்பர் ராஜ் குமார் இருக்கிறார்  சென்று கண்டு படித்து மகிழுங்கள்!!
நிற்க! சின்னதாய் மனதை பாதித்த செய்தி:

  அடக்குமுறை, சர்வாதிகாரம் என அதிகார போட்டிகள் ஆரோக்கியமில்லாமல் நடந்து அதில் பலியான எத்தனையோ நல்ல உள்ளங்கள் தங்கள் கூக் குரலினை பதிவு செய்ய முடியாமல் மெளனமாக கண்ணீர் வடித்து தமக்குள் அடக்கி வைத்து மரணித்து விடுகின்றனர். சத்தியம் என்றும் வெல்லும்!! ஆனால் காலம் எப்போதும் சீக்கிரம் ஓடி விடுகிறது. இரண்டும் ஒரே கோட்டில் எப்போதும் பயணம் செய்வதில்லை. அதனால் பாதிப்பின் வீரியம் குறைய வெகு நாட்கள் ஆகி விட்ட பின்னர் வரும் நீதி என்பது மனம் தளர வைக்கும் ஒன்றாகவே இருந்து வருகிறது.
 ஒரு சகோதரியின் கண்ணீரை ஆனந்த விகடன் பதிவு செய்து வைத்திருக்கிறது. அதனை நான் முன்பதாக படிக்க வில்லை அடுத்த மாதம் அது தொடர்பான விளக்கம் விகடன் கொடுத்திருந்தது. ஆனந்த விகடனின் இந்த பதிவுக்கு என் நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். அதனை குறித்த சிந்தனையில் நண்பர் திரு சௌந்தர் அவர்களது வலை பக்கங்களை மேய்ந்த போது கிடைத்த ஸ்கேன் சிலவற்றினை இங்கே இணைக்கிறேன். நண்பர்கள் அதில் உள்ள உண்மையை உணர்ந்து கொள்ள வசதியாக இருக்கும். மனதை பாதித்த இந்த செய்தி கீழே !





 சர்வாதிகாரம் என்பதே ஆபத்தானதுதான், அது உலகத்தில் எங்கிருந்தாலும் , எந்த மூலையில் இருந்தாலும் அதனை அன்பால் மட்டுமே, அஹிம்சை முறையில்  மட்டுமே களையப்பட  வேண்டும். அன்பு மட்டுமே நிலை பெற வேண்டும். அதுவே மனித குலத்தின் மாபெரும் கண்டு பிடிப்பாகும் என்பதே அடியேனின் தாழ்மையான கருத்து ஆகும். ஆயுதம் அன்பானால் அமைதி கண்டிப்பாக, நிச்சயமாக வரும் வந்தே தீரும்!!

  என்றும்  அதே அன்புடன் மற்றும் கனத்த இதயத்துடன் உங்கள் இனிய நண்பன் ஜானி!

சாவியைத் தேடி.. கதை எண்: 02 காரிகன் ஸ்பெஷல்

 இனிய வணக்கம் வாசகர்களே  உலக புத்தக தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.. இம்மாதம் வெளியாகி இருக்கும் காரிக...