ஞாயிறு, 31 மார்ச், 2013

பொன் தேவதையின் ஈஸ்டர் நல்வாழ்த்துக்கள்!

         அன்பு நாட்டமுடையோரே ! அன்பே அனைவருக்கும் இறைவன் கொடுத்த அள்ளக் குறையாத அமுதமாகும்! உங்கள் அனைவருக்கும் எனது ஈஸ்டர் திருநாள் வாழ்த்துக்கள்! இனியவர் இயேசுவின் சமாதானம் உங்களை நிரப்புவதாக! வாழ்வு மலரட்டும்! நிம்மதி நிலைக்கட்டும்! 


 ராணி காமிக்ஸின் அற்புத பொக்கிஷங்களுக்கு ஒரு காலத்தில் அவ்வளவு பெருமிதம் உண்டு! அற்புதமான அந்த தருணங்கள் வாழ்வில் மறக்கவியலாத நிகழ்வுகள்! ராணி மீண்டும் தனது பொற்கால காமிக்ஸ் வெளியீட்டு முயற்சிகளுக்குத் திரும்ப வேண்டும்! 

"பொன் தேவதை" ராணி காமிக்ஸில் வெளியிடப்பட்ட அற்புதமான, அதிரடிகள் நிரம்பிய சூப்பர் கதை. வெளியீடு எண் முப்பத்தைந்து. வெளியான வருடம் 1985. December 1-14. எனது எட்டு வயது நினைவுகளில் இன்றும் அலையடிக்கும் அழகான கதை இது!   
அட்டையில் அதிரடி!

மன்னர் பீமா சிறப்பான காட்டரசன்!


அறிமுகப் படலம்!






தமிழ் பழமொழியை புகுத்திய முறை காணீர்! 


அவரு பெயரு டிரான்ஸ்போர்ட்டர் ஹி ஹி ஆனா கையாள்வது ஜேம்ஸை ஆச்சே! விவகாரமானவராதான் இருக்கணும்!

அடப்பாவமே அதுக்குள்ளே போட்டுத் தள்ளி விட்டனரே!







 ரகசியமாய் ஒரு ரகசியம் ஒன்று என்கிட்டே இருக்கு அதுக்கு விலை கொடுங்க. அதுக்கு முன்னாடி ஜாமீன் பிணையாக ஜேம்ஸ்பாண்ட் என்கிட்ட அனுப்பப் படவேண்டும் என்று நம்ம ஸ்பெக்ட்ரா மேடம் கோருகிறார். அவரை அனுப்ப இங்கிலாந்து உளவுத்துறை தயாராகிறது! அப்படி போகும் அவரையும், ஸ்பெக்ட்ரா நபரையும் ஒரு கும்பல் போட்டுத் தள்ளிடுது! அவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகும் ஸ்பெக்ட்ரா நபர் இறக்கும் தருவாயில் ஒரு கோட்டை இழுத்து விட்டு சாகிறார். அவர் உச்சரிக்கும் வாசகம் பர். தப்பிக்கும் ஜேம்ஸ் அந்த கோட்டில் ரோடு போடறதுதாங்க கதையே! கோட்டோட ஒரு நுனியா கிடைக்கற குறி சொல்லும் பெண்மணியும் அந்த அடையாளம் தெரியா கும்பலால் பரலோகம் அனுப்பப்பட,தொடர்ந்து இருமுறை தப்பிக்கும் ஜேம்ஸ் புதிருக்கான விடையை ஒரு சிகரெட் லைட்டர் மூலமாக கண்டு பிடித்து அரசை எச்சரிக்கிறார். ஆனால் காலம் கடந்து விடுவதாலும், நாட்டின் முன்னேற்றம் இந்த நிகழ்வுகளால் பாதிக்கப் படக்கூடும் என்கிற காரணத்தால் சொன்ன தேதியில் விமானம் பறக்கும் அதில் ஜேம்ஸ் பயணம் செய்து பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும் என்கிற நிலையை அரசாங்கம் எடுக்கிறது!




















பர்னபாஸ் என்கிற நபர் ஸ்பெக்ட்ரா அமைப்பில் இருந்து பிரிந்து வந்தவர் தற்போது பொன் தேவதை தயாரிப்பு பணியில் முக்கியமான நபராக வலம் வருகிறார் என்கிற தகவல் உளவு அமைப்பை எட்டுகிறது. அதற்குள் பொன் தேவதை தன் பயணத்தை இங்கிலாந்தின் முக்கியஸ்தர்கள் சகிதம் துவக்கி விடுகிறாள்! இல்லாங்காட்டி விமான நிலையத்திலேயே பர்னபாசை அமுக்கி இருப்பாங்க! கதை முடிஞ்சிருக்கும்! 
நம்ம ஜேம்ஸ் - ரிப்போர்ட்டர் மில்டன் என்கிற பெயரில் உலவிக்கொண்டு பர்னபாசை பேட்டி காண்கிறார். வெல்வெட் என்கிற விமான பணிப்பெண் உதவ வர அவரிடம் முறையற்ற விதத்தில் நடக்க முயலும் பர்னபாசை ஜேம்ஸ் கண்டிக்கிறார். 
மதிய உணவு அருந்தும் அனைத்து பிரயாணிகளும் மயங்கி விழ பர்னபாஸ் ஜேம்ஸை சோதனை செய்ய முயலும்போது நம்ம ஹீரோ தனது மயக்க வினாடிகளிலும் அதிரடி செய்ய முயன்று தலையில் அடியாள் ரீகனால் அடிபட்டு மயங்குகிறார்.  

              "பொன் தேவதை " விமானத்தின் விசேஷ அம்சங்கள் என்னவெனில் அது அணு சக்தியால் இயங்க வல்லது. நேரடியாக ஒரு இடத்தில் தரையிறக்கவியலும். பொன் வண்ணம் தீட்டப் பட்டு ஜொலிக்கும். அது இறங்க ஓடு தளம் தேவையில்லை. எனவே ஒரு மொட்டை மாடியில் கூட தரை இறங்க செய்யவியலும்.
            கடத்தப்பட்ட விமானம் தென் அட்லாண்டிக் கடலில் உள்ள ஒரு தீவில் இரு பெரிய பாறைகளுக்கு இடையில் தரையிறக்கப்படுகிறது. அதன் மீது தார் பாய் போர்த்தப்படுகிறது.

இங்கிலாந்து அரசாங்கத்திடம் முன்னூற்று பத்து பிரயாணிகளையும் விடுவிக்க வேண்டுமானால் பத்து கோடி பவுண்டுகள் தர வேண்டும் என பர்னபாஸ் மிரட்டல் விடுக்கிறார்.  "பொன் தேவதையை" விடுவிக்க தனியாக பத்து கோடி பவுண்டுகள் வேண்டும் அதை அப்புறமா டீல் பண்ணிக்கிடலாம் என்கிறார்கள். "ஆசைக்கு இல்லை அளவென்ற எல்லை" ஒரு தமிழ் பழமொழி!












              ஜேம்ஸை கொன்று அதனை மிரட்டலாக பயன்படுத்தி மற்ற பயணிகள் தங்கள் உறவினர்களுக்கு கடிதம் எழுத வைக்க எண்ணுகின்ற பர்னபாஸ், ஜேம்ஸை கையைக் கட்டி படகால் இழுத்து சென்று சுறாக்கள் நிறைந்த பகுதியில் விடுவது என உத்தரவிடுகிறார். கைகள் கட்டப்பட்ட நிலையிலும் அஞ்சாமல் தன்னிடம் இருக்கும் பெல்ட்டின் ரம்பத்தினை வைத்து கைக் கட்டினை அறுத்தெறிகிறார் ஜேம்ஸ். அது கண்டு படகை பின்னால் கொண்டு வந்து படகின் ப்ரோப்பெல்லர் பிளேடுகள் அவரை வெட்டி எறிய முயல்கின்றனர் பஞ்சமா பாதகர்கள். ஒரு புறம் சுறாக்கூட்டம், மறு புறம் தீயோர் கூட்டம். தத்தளிக்கிறார் நண்பர் ஜேம்ஸ். விதி வீசிச் செல்லும் காற்று எப்போதுமே ஒரே பக்கமே பயணிப்பதில்லையே?

 ஒரு சுறா படகின் பக்கம் போய் பிளேடால் தாக்குண்டு தன் இன்னுயிரை ஈய மற்ற சுறாக்கள் தங்கள் பசிக்கு கிடைத்த இரையாக அதை நோக்கிப் பாய, குண்டுகள் தன் பின்னால் பாய ஜேம்ஸ் நீந்துகிறார் கரையை நோக்கி தன்னுயிரை காக்க! 

படகு பழுதானதால் விரைந்து செல்ல முடியாமல் அலைகடலில் ஆட, குண்டு சுடும் தொலைவை விட்டு விலகுகிறார். இருள் படரும் வரை தேடி அலுத்து திரும்புகிறார்கள் தீயவர்கள்! மறு விமானத்தில் பர்னபாஸ் பிரான்ஸ் செல்ல எண்ணி கனவுகளுடன் இரவு உணவை வெல்வெட்டுடன்   முடிக்கும் சிந்தனை மனதில் உதிக்க தனது வெற்றியை கொண்டாட முயல ஜேம்ஸ் வந்து தடுக்க  பொன் தேவதையினை மீட்கும் முயற்சியில் துணை விமானியுடன் வெற்றி பெறுகிறார் ஜேம்ஸ். பர்னபாஸ் அந்த முயற்சியை தடுக்க எத்தனித்து வானில் இருந்து துரும்பென வீழ்கிறார் தன் நிறைவேறாத கனவுகளுடன்!  

வெறி கொண்ட வேங்கை!





வானம் அளவு ஆசைப்பட்டால் அதோகதிதான்! அன்றோ!




( நன்றிகள் ராணி காமிக்ஸ் நிறுவனத்திற்கு உரித்தானது. அவர்கள் மீண்டும் முழுவீச்சில்  களத்தில் இறங்கிட வேண்டும் என்கிற ஒரு ரசிகனின் ஆர்வத்தின் விளைவாகவே இந்த பதிவு வெளியிடப் பட்டு உள்ளது. சம்மந்த பட்ட நிறுவனம் ஆட்சேபித்தால் உடனே பதிவில் உள்ள ஐந்து சதவீத படங்களை தவிர மற்றவை நீக்கம் செய்யப்படும் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்! வாங்க சார் ராமஜெயம் சார், அ.மா.சாமி போன்ற அற்புதமான ஆசிரியர்கள் கலக்கிய சிம்மாசனம் சீக்கிரம் நிரம்ப வேண்டும் என்பதே ரசிகர்களாகிய எங்களது ஆசை! )

சிறப்பு நன்றிகள் : புத்தகத்தை படிக்க கொடுத்து உதவிய அரிய மனிதர் நண்பர் திரு.முருகவேல் பாண்டியன், அலங்காநல்லூர் அவர்களுக்கு..
 பதிவுக்கு ஆலோசனை மற்றும் கருத்து தெரிவித்து வரும் அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள்! 
பின்னர்? பின்னரே! வருகிறேன்! பாய்!!
   

வெள்ளி, 15 மார்ச், 2013

வெளிநாடு செல்வோர் கவனத்திற்கு!




*வெளிநாடுகளுக்கு போகும்போது பாஸ்போர்ட், விசா போன்ற ஆவணங்களை மிகவும் பத்திரமாக வைத்துகொள்வது மிக மிக அவசியமான எச்சரிக்கை நடவடிக்கையாகும்! எல்லாத்தையும் ஒரு தனி கவர்ல வெச்சிகிடுங்க! அவசரத்துக்கு எடுத்து நாம என்ன படிச்சிருக்கோம்னு பார்த்துக்கிடலாம் இல்லையா? ஹி! ஹி! ஆவணங்களை பாதுகாப்பா வெச்சிகிடுங்கப்பா.  

*உங்கள் வசமுள்ள பணத்தினை அயல் நாடுகளின் கரன்சியாக மாற்றும்போது அங்கீகரிக்கப் பட்ட வங்கி மற்றும் MONEY CHANGERS மூலம் மட்டுமே மாற்ற வேண்டும். பணத்தினை சம்பந்தப்பட்ட நாட்டின் கரன்ஸியாக மாற்றும்போது அதற்கான தக்க ரசீதை மிகவும் பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள்! நாம சரியா ஆவணங்களை வைத்து இருந்தால் அங்குள்ள அதிகாரிகள் தேவையில்லாம நோண்ட மாட்டாங்க! எதை வாங்கினாலும் அதை கஸ்டம்ஸ் வழியாக கொண்டு போகணும் என்பது மனதில் ஓடிக்கிட்டு இருக்கணும்ங்க! 

*செல்லும் நாட்டின் இந்திய தூதரக தொலைபேசி எண் மற்றும் முகவரியை கையில் வைத்துக்கொள்வது தேவையான நேரத்தில் உதவும்.எங்கியாவது நல்லா மாட்டிகிட்டோம்னா அந்த நாட்டில் இருக்கும் நம்ம தூதரகம்தானுங்க உதவக்கூடிய ஆபத்பாந்தவன்! 

*குறைந்தது ஆறு மாத காலத்துக்கு செல்ல கூடிய வகையில்  பாஸ்போர்ட் தேதி இருப்பது நல்லது. காலாவதியான பாஸ்போர்ட் சிறைக்குள் தள்ளி விடும். எச்சரிக்கை! 


*அந்தந்த நாட்டின் முக்கியமான கட்டுப்பாடுகளை முன்பே கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்! பொது இடங்களில் புகை பிடிப்பது, எச்சில் துப்புவது போன்றவற்றில் கவனம் தேவை. சில நாடுகளில் அதற்கென சில நெறி முறைகள், கட்டுப்பாடுகளை வைத்து இருப்பார்கள். அவற்றை கண்டிப்பாகக் கடைப் பிடிக்க வேண்டும்! 

          உதாரணத்திற்கு நம்ம பஸ் சாயர் கதை "சிறை மீட்டிய சித்திரம் " முத்து காமிக்ஸ் வெளியீடு எண் 44 ஐயே எடுத்துக் கொள்வோமே! சின்னஞ்சிறு குழந்தைகள் விளையாடுவது போன்ற மன நிலையில் மகிழ்ச்சியாக ஊரை சுற்றி பார்க்க ஒரு ஜோடி சின்னஞ்சிறு நாட்டில் சுற்றுலா மேற்கொள்கிறது. அந்த நாட்டினைப் பற்றி அவ்வளவாய் அறியாமல் போனதன் விளைவு அந்த நாட்டின் தேசத் தந்தை சிலை குதிரையின் மேல் கம்பீரமாக அமர்ந்திருக்க சுற்றுலா சென்றவிடத்து சிலையின் பின்னால் ஏறி அமர்ந்துகொண்டு புகைப்படம் எடுக்க முயற்சி மேற்கொள்கிறது அந்த ஜோடி. காவலர்கள் பெண்ணை சிறையில் அடைக்கிறார்கள். அந்த இளைஞன் தன் தவறால் தனது காதலி சிறைப்பட்டு விட்டதால் அவளை மீட்டே தீர வேண்டும் என்ற இலட்சியத்தோடு சிறைக்கு அருகே தவம் கிடக்கிறான். அவனுக்கு ஆதரவாக சர்க்கஸ் குடும்பம் ஒன்று இருக்க அவனது பணக்கார அப்பா நம்ம ஹீரோ பஸ் சாயரை அனுப்பி வைக்கிறார். அவரது மூளையில் உதித்த உத்திதான் கார்டூன் மூலம் கதை சொல்லும் பாணியில் தப்பிக்க அந்த பெண்ணின் பங்கிலிருந்து செயல்பட வேண்டிய முறையை செய்தித்தாள் போலவே வடிவமைத்து சிறைக்குள் அனுப்பி வைப்பது. அவ்வாறே அந்த பெண் நடந்து கொண்டு சிறையில் இருந்து மீட்கப்படுகிறாள். இந்த கதையின் நீதி என்னன்னா? மேல விதிமுறைகளை நல்லா படிங்க. மனசுல பதிங்க கல்விதாங்க ஒருத்தருக்கு உண்மையான வழிகாட்டி! அந்தந்த நாட்டப் பத்தி தெரியாம போய் மாட்டிக் கிட்டு புலம்பாதீங்க. 


குரங்கு தேடிய கொள்ளையர் புதையல் கதையின் தொடர்ச்சியான வசனங்களுடன் ஆரம்பிக்கும் கதையில் சின்னஞ்சிறு ஜோடியொன்று உல்லாசப் பயணமாக மால்யா என்கிற நாட்டுக்கு செல்கிறது!












*வெளி நாடு செல்லும் இடத்தில் தீம் பார்க்குகளின் சாகச விளையாட்டுகளை இதய நோயாளிகள், தீவிர நோயாளிகள் தவிர்த்து விட வேண்டும்! மருந்து, மாத்திரை எல்லாம் எடுத்துக்குங்க. அங்கே சில மருந்துங்க தடை செய்யப் பட்டிருக்கும். மருந்தை அங்கே வாங்கிக்கலாம் என்று அலட்சியமா இருக்காதீங்க! அவதிப்படாதீங்க!
*வெளிநாடுகளில் இருந்து திரும்பி வரும்போது, அனுமதிக்கப்பட்ட அளவில் மட்டும்தான் பொருட்களை வாங்கி வர வேண்டும்! இதனால் சுங்கப் பிரச்சினைகளை தவிர்த்துக்கொள்ள முடியும்! பணத்திற்குக் கட்டுப்பாடு உண்டுங்க! மொத்தமா கொண்டு வரலாம் என்று அங்கேயே சேர்த்து வைத்துக் கொண்டு இருக்காதீங்க! அப்பா, அம்மா, வீட்ல எல்லாருக்கும் கொஞ்சம் கொஞ்சமா அப்பப்போ அனுப்பி வைங்க! பொருளெல்லாம் இங்கேயே வாங்கிடலாம். ஹாயா போயி ஹாயா வாங்க! அன்னிய செலாவணியை கொஞ்சமா அங்கே செலவு பண்ணுங்க. நிறைய இந்தியாவில் நிலமா, பொருளா, ஷேர் மார்கெட்ல இப்படி உங்க முதலீட்டை திருப்பி விடுங்க. 

*படகுப் பயணம் மற்றும் நீர்நிலை விளையாட்டுகளின்போது தண்ணீரில் மிதக்கும் லைப் ஜாக்கெட் போன்ற பாதுகாப்பு உபகரணங்களை தவறாமல் அணிந்து கொள்ள வேண்டும்! அங்கங்க பாதுகாப்பு உபகரணங்கள் கட்டாயம் கொடுப்பாங்க, ஆனா வாடகை உண்டு நம்ம ஆளுங்க என்ன பண்ணுவோம்? அப்பத்தான் விலைவாசி கண்ணுக்கு தென்படும், மெலிசான பர்ஸ் மனசுல மையம் கொள்ளும்! அச்சோ இதுக்கு செலவிடலாமா என நிதியமைச்சர்  மாதிரி மண்டைல ஓடும்! பாதுகாப்பெல்லாம் பார்த்துக்கலாம் அப்படின்னு கோட்டை விட்டுடுவோம்! அதாங்க செய்யவே கூடாத தப்பு! உக்காந்து யோசிச்சாதான் தெரியும் நமக்கு நீச்சலே தெரியாது என்று! உயிரை விட பணம் பெரிதில்லை! அதனால இந்த பாயிண்டு ரொம்ப ரொம்ப முக்கியமானது!

*அந்தந்த நாட்டின் கலாச்சாரம், பழக்க வழக்கம் குறித்து தாழ்வான கருத்துக்களை பொது இடங்களில் வெளிப்படுத்தக் கூடாது. இந்தியாவின் கலாச்சாரமாக அயலவர் கிண்டல் செய்ய எதுவும் இல்லையென நாம நினைக்கிறோம் இல்லையா? அதே போல வர வெளிநாட்டவர்கள் நினைக்கணும் என்று நினைக்கலாமா? யுவான் சுவாங், இபின் பட்டுடா, மார்கோ போலோ போன்ற அயல் நாட்டவர்கள்  நம்மை பற்றிய கருத்துக்களை சுமந்து பெருமை சேர்த்தது போல நல்லதை மட்டும் பதிவு செய்ங்க. வாழ்வில் பிரச்சினை வராதுங்க!  
*வெளி நாட்டுக்குச் சுற்றுலா செல்ல பாஸ்போர்ட் அவசியம். அதற்கு முதலில் விண்ணப்பம் செய்து, பாஸ்போர்ட் கிடைத்த பிறகே மற்ற ஏற்பாடுகளை செய்ய வேண்டும். ஒரு வேளை பாஸ்போர்ட் கிடைக்க தாமதம் அல்லது சிக்கல் ஏற்பட்டால் நீங்கள் செய்த ஏற்பாடுகளை ரத்து செய்ய நேரும் என்பதால் பணம் விரயம் ஆகாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை நல்லதுதானே?

*எல்லாவற்றுக்கும் முன்னதாக நீங்கள் செல்லவிருக்கும் நாட்டின் அரசியல், மத, சமூக நிலைமைகளை குறித்து தெளிவாக படித்தறிந்து கொண்டு செல்வது நன்மையாக அமையும்! அங்கே உள்ளவங்க மன நிலை தெரியாம போனா வடிவேலு-போக்கிரில பேப்பர்ல வடையை அமுக்கி தம்பி  டீ இன்னும் வரலன்னு கடுப்பா உக்காந்து இருப்பாரே! ஆனா அவர் செய்த தப்பு என்னன்னா, அடுத்தவன் என்ன மன நிலைல இருக்கிறான் என்று தெரியாமல் அவன் கையில் இருக்கும் பேப்பரை பறித்துக்கொண்டு சென்றதுதான். நம்ம மக்கள் வண்டியை திருப்பும்போது இதுமாதிரிதான் அலட்சியமா யாரையும் கண்டுக்காம திருப்புவாங்க. யாராவது தெரியாம இடிச்சிட்டா போதுமே! அங்கேயே பிராண்டி எடுத்துடுவாங்க! அதனால உஷார் மக்களே! 

*எல்லா நாட்டவரும் பூமியின் குடிகளே என்பதால் எங்கே சென்றாலும் அன்பை பரிமாறி அமைதியை நாடி சந்தோசமாக  இருங்கள்! வாழ்க வளமுடன்!
 தகவலுக்கு நன்றி! தினத்தந்தி - இளைஞர் மலர் நிறுவனத்திற்கே!   தங்கள் பயணம் இனிமையாக அமைய எங்கள் நல்வாழ்த்துக்கள்! BON VOYAGE!!

எனக்கு எண்டே கிடையாது_ டிடெக்டிவ் ட்ரேசி_வண்ணத்தில்!!!

வணக்கம் அன்பு வாசகர்களே.. இது நம்ம வலைப்பூ.. லயன் காமிக்ஸில் வெளியான கனவே கொல்லாதே வாசித்திருந்தீர்கள் என்றால் அதில் கனவுக்குள் புகுந்து ஒரு...